Wednesday, 25 May 2016

உடை சிக்னலா? -ஹன்ஸா



உடை சிக்னலா?
                            -ஹன்ஸா

பாவம் அந்தப் பெரியவர்.

ஜெயசுதாஸ் அவர்களைத்தான் சொல்கிறேன். பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து எதிர்மறையாக அவர் விமர்சித்தார் என குற்றச்சாட்டும், அதற்கு அவரை எதிர்த்து..ம்ஹும்…அவரை அவமதித்து பல கமெண்டுகள்.

அவரைத் திட்டுவதோடு அவரின் ஆண் வர்க்கத்தையே திட்டி….

இதில் அவர் தலைமுறையும் சரி நாமும் சரி கவனிக்க மறந்த விஷயங்கள் பல.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நம் பாட்டி காலத்தில் ஜீன்ஸ் அணிவதைப் பற்றி..? அப்போது எந்த சராசரிப் பெண்ணும் ஜீன்ஸ் அணிந்திருக்கவே முடியாது நம் ஊரில். மீறி எவரேனும் அணிந்திருந்தால், சமூகத்தில் ஒட்டாதவறாக, சமுக்கத்தை மீறியவராகவே பார்க்கப்பட்டிருப்பார். குடும்பத்தை மீறி அவர் அதைச் செய்தமையால், குடும்ப குணங்கள் இல்லாத “தொழில்’ செய்யும் பெண்ணாகவே பார்க்கப்பட்டிருப்பார்.
அதாவது ஆடை மூலம் ஆணைக் கவரும் தொழில் செய்யும் பெண்ணாக.. அல்லவா?
இதை ஊகிக்க முடிகிறது தானே?

ஆக, அவர்களுக்கு ஜீன்ஸ் எனும் ஆடை ஆணைக் கவரும் ஒரு சிக்னல். அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தார்கள். சூழலும் அதற்கு இடம் கொடுத்தது.

சரி.

இப்போதைய, இளந்தலைமுறைக்கு ஜீன்ஸ் என்பது ஒரு ஆடை. அவ்வளவே. அதிலும் மத்திய, மேல் வகுப்பு(ஃபினான்ஷியலி, மெண்டலி) காரர்களிடம் அது மற்றும் ஒரு உடுப்பு.

அந்தத் தலைமுறையிடம் போய் முந்தைய தலைமுறையின் சரி தவறுகளை வலியுறுத்தினால்..?
ஆக, ஜெயசுதாஸ் ஒரு ஆணாக அந்த உடை பற்றி கமெண்ட் செய்யவில்லை. முந்தை தலைமுறைக்காரராகவே அதை அவர் தன் அனுபவத்திலிருந்து சொல்லி இருப்பதாகவே நாம் அதைப் பார்க்க வேண்டும்..

அதாவது ஜெயசுதாசின் கமெண்ட் ஆண் Vs பெண் அல்ல. முந்தைய தலைமுறை Vs இன்றைய தலைமுறை.

எப்படி அவர் தான் சொன்னதன் முழு வீச்சையும் உணரவில்லையோ அது போலவே அவரின் இந்த கருத்தை எதிர்ப்பவர்களும் எதிர்வினையாற்றுகிறார்கள்.

சரி… அப்படி ஏன் பெண்ணின் உடை பற்றி ஆண்கள் கமெண்ட் செய்வதும் அதற்கு பெண்கள் எதிர்வினையாற்றுவதும் நிகழ்கிறது..?

ஆடை என்பது ’கவர்வது’ எனும் முக்கிய காரணத்திற்காகவும்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதுமட்டும் அல்ல காரணம்.

இயற்கை தட்ப வெப்பத்திற்கு அஞ்சி மட்டுமே ஆடை அணிந்தார்கள் எனில், இயற்கையே அதற்கு தோலில் முடி (பனிக்கரடி போல) கொடுத்திருக்குமே?
ஆரம்பத்தில் பர்ஸனல் பாகங்களை தூசி, தும்பு, பூச்சி இவற்றிற்காக மூடி இருந்திருக்கலாம்தான்.. ஆனால்,…

இயற்கை ’தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்’ என்கிறது. அதனாலேயே, திறமையான ஒன்றையே, வலிமையான ஒன்றையே தேர்ந்தெடுக்கிறது இயற்கை.

இயற்கை நியதியின் படி வலிமையான ஆணுக்கே பெண் எதிர்கால சந்ததியை உருவாக்க பிள்ளை பெற விரும்புவாள்.

கவனிக்க..இப்போது உங்கள் மனதில் இருக்க வேண்டியவர்கள் ஆடையற்ற ஆதி மனிதனும், மனுஷியும்தான்.

சரி. எவன் வீரனோ, எவன் தன் குடியைக் காப்பானோ அவனுக்கு பிள்ளை பெறலாம்.

அவன்? எந்தப் பெண் ஆரோக்கியமான குழந்தையை தனக்குப் பெற்றுத்தர இயலுமோ அவளே அவனுக்கும் தேவை.

கொழுத்த பெண்… அவனுடைய குழந்தைக்குத் தோதாக பெருத்த மார்புகள்..இவை … ஆரோக்கியம் அன்று. அதாவது ஒவ்வொரு வேளை உணவுக்கும் உணவு தேடிக்கொண்டே இருக்கும் காலகட்டத்தில் இவை அவனைக் கவர்கின்றன.

””அட..? அப்படியா? எனில் உன்னை இன்னும் கவர்கிறேன் பார். ஏனெனில், என் அடுத்த தலைமுறையை நான்தான் உருவாக்க வேண்டும். போடு மூடியை.”” என அவள் மூடுகிறாள்.

சரி ஆண் என்ன செய்கிறான். அன்றைய ஆணின் எச்சம்தானே இன்றைய ஆண்? பருவவயதில் தான் ஒரு வீரன் எனக் காட்ட ஃபிசிகலாக தீரம் காட்டும் விடலைகளைத்தான் நாம் பேருந்துகளில் பார்க்கிறோமே? இவையும் பெண்ணைக் கவரும் முயற்சிதான்.

இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.

செக்ஸாலஜிஸ்டுகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஆண்/பெண் உறவில் மிக முக்கிய உடற்பாகமாகச் சொல்வது விரல்களையும், தொடு உணர்ச்சியையும்தான்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மையும் கூட.

எவர் தொடுகையும், உடனே உணர்வுப் பெருக்கை ஏற்படுத்திவிடாது. அதில் நேரம் காலம் போலவே மிக முக்கியமானது தொடும் நபர். ஆக இயல்பாகக்கூட நான் தொடப்படவில்லை. எனும் தகவலை பெண் சொல்ல விரும்புகிறாள். அதனால் மூடுகிறாள் (அந்தத் தகவலை ஏன் அவள் சொல்ல வேண்டும்? ஏனெனில் சிங்கம் போலவே மனிதனில் ஆண் இனமும், எவை தன் குழந்தை என நிச்சயம் செய்து கொள்ள விரும்புவதே)

இப்படி ஆரம்பமான உடை…எவள் அதிகம் மூடி இருக்கிறாளோ அவள் தொடப்படாதவளாக ஆணின் மனதில்.
எது மறைக்கப்படுகிறதோ அது கவரும்தானே?

இதனாலேயே ஆணோ பெண்ணோ, ஆடை அணிகிறோம். மேலும் நாமும் இடம் மாறிக்கொண்டே இருப்பதாலும், மாறிக்கொண்டே இருக்கும் தட்ப வெப்பத்திலிருந்தும் நம்மைக் காப்பதற்காகவும் உடை உடுத்துகிறோம்.. அதையும் விட நம்மை நம் உயரத்தை அடுத்தவருக்குச் சொல்லவும் தோதாக இருக்கிறது இந்த உடை. அல்லவா? எனவே தொடர்கிறோம்.


சரி ஆடை என்பதே சிக்னல்தானா?

இல்லை.
.ஆனால் ஆடை கண்டுபிடிப்பின் ஆரம்பப்புள்ளை சிக்னலாக இருந்ததால் கவர்வதாக இருந்ததால் அது இன்றும் அப்படி மட்டுமே பார்க்கப்படுகிறது.

எவர் மறைப்பதன் மூலம் அடுத்தவரைக் கவர வேண்டுமோ அவர் மட்டும் ஆடை அணியட்டும் என்றில்லாமல், அந்த காலகட்டத்தை எல்லாரும் கடந்தமையால், எல்லாருமே ஆடை அணிவது என்றாகியது
அது தொடர்வதால், கவரும் தேவை இல்லாதவர் அணியும் ஆடைக்கும் ’அதே நோக்கம்’ என்றே பார்க்கப்படுகிறது. ஆடை மூலம் சிக்னல் தரவேண்டிய அவசியத்தில் இன்று நாம் இல்லை.

அது சரி.. அது ஏன் பெண் உடை பற்றி ஆண் கமெண்ட் செய்து கொண்டே இருக்கிறான்..?

’நாப்பது வயசில எதுக்கு இதுங்க பேண்டு போடுதுங்க? பைக் ஓட்டுதுங்க? கிட்ட வந்தாதான் தெரியுது சித்தப்பான்னு”

“இந்த வயசில இவன் எதுக்கு தலைக்கு டை அடிக்கிறான்? தேவையா இது?” என எந்த பெண்ணும் கமெண்ட் செய்து பார்த்ததில்லை.

கவரும் தேவை இருக்கிற ஒரு பெண் ஆணைக் கவர ஏதேனும் செய்தால், அதை எந்தப் பெண் செய்தாலும் எந்த வயதில் செய்தாலும் அது ஆணைக் கவர்ச் செய்வதாகவே அவன் புரிந்து கொள்கிறானது.

எங்கே அவன் தன் செயலை அவனைக் கவரும் சிக்னலாகப் புரிந்து கொண்டுவிடுவானோ எனும் அச்சத்திலேயே பல பெண்கள் தன்னை இன்னும் இன்னும் மூடிக்கொண்டு அதுவே கற்பு, ஒழுக்கம் என தானும் நம்பி, அடுத்தவரையும் நம்பச்செய்துவிடுகின்றனர். இவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் அதே நம்பிக்கையிலேயே..

ஆனால் அதே போல, பெண்ணைக் கவர ஆண் செய்யும் தீர சேட்டைகளை ஒரு முதிர்ந்த ஆண் செய்தால் அது பெண்ணைக் கவர என பெண் எடுப்பதில்லை. காரணம் அவள் உள்ளுணர்வு கற்றுத்தந்திருக்கிறது

ஆனாலும் சில பெண்கள் தவறான ஆணைத் தேர்ந்தெடுப்பதேன்? சோப்ளாங்கியான, உபயோகமற்ற வீணாய்ப் போனவனை தேர்ந்தெடுப்பதேன்.? (விரிவாக பிறிதொரு சமயம்)

ஏனெனில், எல்லா மிருகங்களையும் போல இயற்கை வழி மட்டும் மனிதன் நடப்பதில்லை. பிரபஞ்ச உண்மைக்கு எதிர்த்தே பல சமயங்களில்..

பிரபஞ்ச உண்மை..?
எல்லா மிருகங்களுக்கும் தனக்கு பிறக்கும் அடுத்த தலைமுறையைக் காக்கும் கடமை இருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பேரண்டல் பர்டன்.

அந்த வினாடியில்தான் பிறந்த குட்டியை தாய் ஒட்டகச் சிவிங்க நாவால் வருடிக் கொடுப்பதும், சில நிமிடங்களிலேயே அந்த குட்டியைத் தள்ளிவிடுவதும் நாம் டிஸ்கவரியில் பார்த்திருக்கிறோம்தானே?

“ஓடு….எழுந்து ஓடு..” என கற்றுத்தரும் முயற்சி. மிகக் குறுகிய காலத்திலேயே பேரண்டல் பர்டன் முடிந்து இரண்டும் வெவ்வேறு தனி மிருகங்களாகிவிடுகின்றன.

மனிதனின் பேரண்டல் பர்டன் எனும் குழந்தைய்ப் பராமரிக்கும் காலம் மிக மிக அதிகம். அது பல சமயங்களில் வாழ்னாள் முழுதும் தொடர்கிறது ஆண் குட்டி என்றால்(அதைப் பிறகு பார்ப்போம்)

பெண் மிருகங்களைப் பொறுத்தவரை அடுத்த தலைமுறைய் உருவாக்க வேண்டும் அதற்கு எந்த ஆண் மிருகம் வலிமை மிகுந்தது என அறிந்தால் போதும்.

1. மனித இனத்தில் அப்படி இல்லை. எவன் வலிமையானவன்?
2. எவன் அந்த பேரண்டல் பர்டன் பீரியடில் உடனிருப்பான்?

இந்த இரண்டு தேவைகளையும் கவனத்தில் கொண்டும்,
3. எவை என் குழந்தைகள் எனும் ஆணின் கேள்விக்கும்
பதில் சொல்லும் விதமாக நாம் ஏற்படுத்திக் கொண்டதுதான் ’திருமணம்’..’ஒருவருக்கு ஒருத்தி’..எனும் அமைப்புகள் எல்லாம்.உண்மையில் அவை இயற்கை அல்ல. அல்லவா? ஆனால் இயற்கையின் தேவையும்தான்.

இந்த அமைப்புகள் வந்ததாலேயே பல வீரமற்ற, திறமற்றவருக்கும் தனது அடுத்த தலைமுறையை உருவாக்க வாய்ப்பு.

சரி அது இருக்கட்டும்.

பேரண்டல் பர்டனின் போது பிள்ளையின் தகப்பனாக அவன் இருந்தால் மட்டுமே உடனிருப்பான். எனவேதான் அவள் கற்பு என ஒன்றை தன் மீது போர்த்திக் கொள்கிறாள். அல்லது போர்த்தப்படுகிறாள். அதை ஒட்டிய காமத்தை காதல் என்கிறோம்.
காதல் என்பதே காமத்தின் மீது போர்த்திய பட்டுத்துணிதானே?

ஏன் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எதாவது லடாய்?

பெண்ணியம் என்பது ஆணை எதிர்ப்பது அல்ல ஆனாலும் ஏன்?

வெயிலி இருந்து நாங்கள் சிலர் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். உங்களிடம் வெளியே அதிக வெயில் என அலுத்துக் கொள்கிறோம். முதலில் இதை எங்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டிருந்திருப்போம். பிறகு எனக்கு இருக்கும் அதே வெயிலும், வலியும்தானே அவருக்கும் என்பதால் பேசிப் பிரயோசனமில்ல என வாளாவிருப்போம்.
அப்போது வீட்டினுள் நுழைந்ததும் நீங்கள். கண்டிப்பாக உங்களிடம் பகிர்வோம்தானே?

ஏனெனில் என் வலியை வலியல்லாத ஒருவரிடம் பகிரும் முயற்சியே அது.
அதே போலத்தான்…பீரியட்ஸ் தொந்தரவையும், பிள்ளை பெறுதல், தனக்கு எந்த உடை கம்ஃபர்டபிலாக இருக்கிறது என பலவற்றையும் ஆணிடம் பெண் பகிர்கிறாள்.
இது வெறும் பகிர்வுமட்டுமே. பதில் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், அவன் என்ன நினைக்கிறான் ..?

அறைக்குள் இருப்பவரிடம் “நீ மட்டும் அறைக்குள் இருக்கிறாயே? நாங்கள் மட்டும் கஷ்டப்படுகிறோமே அதற்கு நீதான் காரணம் எனச் சொன்னதாக எடுப்பதே போல…

பெண்ணின் வலியைக் கேட்கும் ஆண், பெண் தன்னைக் குறை கூறுவதாகவே நினைக்கிறான். எரிச்சலுறுகிறான். பெண்ணியம் எனும் பதத்தையே கேலி செய்கிறான். பெண்ணியம் என்பது ஹ்யுமனிசத்தின் ஒரு பகுதிதான் அன்றோ?

அந்த எரிச்சலில் அவன் சொல்லும் பதிலை வைத்து இவளும் அல்லது இவர்களில் சிலரும் ஆண் தன் எதிரி என்றே நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இது போக ஆணால் பெண்ணுக்கு வரும் இடையுறுகள்…

பெண்ணியம் என்பது பெண்ணாக இருப்பதே என்பதை விடுத்து ஆணைப் போல இருத்தல் என நம்பிவிடுகிறாள்.

ஆணும் பெண்ணும் சமமல்ல, பெண் முற்றிலும் வேறானவள் அவள் மட்டும் கர்பப்பை தாங்கும் வரை.

No comments:

Post a Comment